Thursday, October 15, 2009

கவிதையான என் பயணக்குறிப்புகள்



என் இரயில் பயணத்தின் நொடிகள் ஒவ்வொன்றும் ஒரு ஆனந்தம்,
முன்பின் தெரியாவிட்டாலும் புத்தகம் இரவல் கேட்கும் அருகில் இருப்பவர்,
உலக அரசியலை நினைத்து வருத்தப்படும் எதிர் இருக்கைக்காரர்,
எங்கோ வேலை செய்யும் மகனையோ மகளையோ சந்திக்கச் செல்லும் பெற்றோர்,
கடந்து செல்லும் காட்சிகளை வியந்து பார்க்கும் அந்தச் சிறுவன்,
தேனீர் விற்றுக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்பவன்,
கழிப்பறை வாசலில் துண்டை விரித்து அமர்ந்திருக்கும் முதியவர்,
தடதடவென தாண்டிப் போகும் ஆள் அரவமில்லாத ரயில் நிலையங்கள்,
இரவில் பரவிக் கிடக்கும் அந்த நிசப்தம்,
எங்கோ மூலையில் தூக்கத்தில் எழுந்து விட்ட தன் குழந்தையை தூங்க வைக்கும் தந்தை,
ரயில் பாலங்களைக் கடக்கையில் உண்டாகும் தாளங்கள்,
நிலவொளியில் மௌனமாய்க் கடந்து போகும்  நீர் வற்றிப்போன ஆறுகள்,
இப்படி ஏதோ ஒரு ரயில் பயணத்தின் போதுதான் என்னைக் கடந்து போனாள் அவள்,
ஒற்றை சடை போட்டு, கன்னத்தில் குழி விழச்சிரித்துக்கொண்டு,
ஏதோ ஒரு கவிதைப்புத்தகத்தை படித்துக்கொண்டு,
அவள் இறங்கும் இடம் வந்ததும் மெதுவாய் கலைந்து சென்றாள்,
அந்த கவிதைப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தில் என்னையும் சேர்த்து கடத்திக்கொண்டு,
அன்று என் பயணக்குறிப்புகளெல்லாம் கவிதை,
இன்று வரை என் எல்லா ரயில் பயணங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன்,
என்றோ கண் விழித்துப் பார்க்கையிலோ, சட்டென திரும்பையிலோ,
அவள் என் எதிரே இருக்கமாட்டாளா என்று,
தொடர்கின்றன என் ரயில் பயணங்களும் தேடல்களும்.

Wednesday, October 7, 2009

குடை



குடையின் மீது எனக்கு வெகுகாலமாய் ஒரு பொறாமை,
அதை நனைக்காத மழையே கிடையாது,
ஆனால் யாராவது கேட்டிருப்பார்களா குடையிடம்,
உனக்கு மழை பிடிக்குமா என்று?