Monday, March 8, 2010

தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்

ஒரு புகைப்படத்தில் நம் கண்கள் முதலில் தேடிப் பிடிக்கும் எல்லாமே தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கும் பகுதிகள்தான். தெளிவற்று சற்று மங்கலாய் இருக்கும் பகுதிகளை ஒதுக்கிவிடவே துடிக்கும் நமது கண்கள், அதுதானே இயல்பு. இப்படித் தெளிவாய் இருப்பவைதான் புகைப்படக்கருவி செய்த பகுதிகள். அது தவிர்த்து சட்டகத்தில் மழுங்கிப் போய் இருக்கும் மற்றவற்றை out of focus என்று அழைப்பார்கள்.
, out of focus நம் கண்கள் எதைப் பார்த்தாலும் அது நமக்குத் தெளிவாய்த் தெரியும். நாம் உற்று நோக்கும் அந்தப் பொருள் தவிர, மற்றவை சற்று மங்கலாகவே இருக்கும். அது போல ஒரு புகைப்படத்திலும் அதை உருவாக்குபவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத் தெளிவாய்ப் படம் பிடித்திருப்பார், நம் கவனம் வேறு எங்கும் சிதறிவிடா வண்ணம் ஆக்க அமைவோடு அது அமைந்துவிட்டால் அது பார்வையாளரை எளிதில் சென்றடைந்துவிடும்.
பொதுவாகவே புகைப்படக் கருவிகளில் இரண்டு விதமான focus வசதிகள் உண்டு. ஒன்று, auto focus. இது அப்போது இருக்கும் ஒளி அமைப்பைப் பயன்படுத்தி புகைப்படக் கருவியே எதைக் கூர்மையாய்க் காட்ட வேண்டும் என்று தேர்வு செய்து விடும், மற்றொன்று, manual focus. நாமே நமக்கு எது தேவையோ அதைக் கூர்மையாய்க் காட்டும்படி புகைப்படக் கருவியைத் திருத்தி அமைத்துக் கொள்வது.


Focus என்பது ஒரு புகைப்படத்தில் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று முதல் படத்தின் மூலம் உணரலாம். எத்தனையோ கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். வேறொரு நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நம் நாட்டுப் பெண்ணொருத்தி பூச்சூட்டுகிறாள், வந்தாரை வரவேற்கும் தமழனின் மரபைப் பளிச்சென்று படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புகைப்படம். பூக்களுக்குப் பழகாத அந்தப் பெண்ணின் கூந்தலில் கவனமாய்ப் பூச்சூட்டி விடும் அந்த தமிழ்ப் பெண்ணின் நேர்த்தி, தெருவோரமாய்த்தான் நடக்கிறது என்று நமக்குணர்த்தும் பின்னணி, அந்த வெளிநாட்டுப் பெண்ணின் புன்னகையில் தெறிக்கும் நாம் மெதுவாய்த் தொலைத்துக் கொண்டிருக்கும் - நம் பண்பாட்டின் சுவடுகள். நம் கண்களை அதிகம் உறுத்தாத நிறங்கள் என்று எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் இந்தக் கதைகளைச் சொல்லும் அந்த இரண்டு பெண்களுமே தெளிவற்று இருப்பது இந்தப் புகைப்படத்தின் அழகை வெகுவாய்க் குறைத்து விடுகிறது.
அந்தப் பெண்கள் தெளிவில்லாமல் மழுங்கலாய்த் தெரிய, பின்னணியில் உள்ள வாசல், கதவு இவை எல்லாம் மிகவும் தெளிவாய் இருக்கிறது. அதனால் நம் கண்கள் அந்தப் பெண்களின் இயல்புகளில் ஊன்றாமல் அவர்களுக்குப் பின்னால் தெளிவாய் இருக்கும் மற்ற தேவையற்ற பொருட்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஒரு மிகச்சிறந்த நொடியைப் பதிவு செய்த இந்தப் புகைப்படம் அதை சற்று தெளிவாய்ச் செய்யாததால் அந்த நொடியின் உன்னதமே குறைந்துவிடுகிறது.

இரண்டாவது படம் சரியாகக் கையாளப்பட்டால் focus எப்படி ஒரு படத்தை மெருகேற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பச்சோந்தியின் படம். இந்தப் புகைப்படத்தில் பச்சோந்தி மட்டும் பளிச்சென்று நம் கண்களில் ஒட்டிக்கொள்கிறது, சரியாக focus செய்யப்பட்டதால் மிகத் தெளிவாய்ப் பதிவுசெய்யப்பட்டுள்ளது அந்தப் பச்சோந்தியின் உடல். 
எந்த இடையூறுமில்லாத பின்னணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகச் சீரான வெளிச்சம் பரவியுள்ள சட்டகம், மேலும் பச்சோந்தி சட்டகத்தின் நடுவில் அல்லாமல் சற்று ஓரமாக வைத்துக் கையாளப்பட்டிருக்கும் ஆக்க அமைவு. இவை எல்லாவற்றையும் விட இதைப் படம் பிடித்தவர், நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்துப் படம்பிடித்த பச்சோந்தியின் உடல் பாகங்கள் எல்லாம் தெள்ளத்தெளிவாய்த் தெரிவதுதான் இந்தப் படத்தை முழுமை அடைய வைக்கிறது. அந்த உடலில் பரவிக்கிடக்கும் பச்சை நிறம், அதன் தோலில் நிறைந்திருக்கும் தொடுபரப்பு (Texture), அதே பச்சை நிறத்தில் தனித்து நிற்கும் அதன் கண், ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான அதன் வாயின் உட்புறம், இவை அனைத்திற்கும் மேலாக அதே இளஞ்சிவப்பு நிறத்தில் அதன் பச்சை நிற உடலில் இருந்து வேறுபட்டுத் தெரியும் அதன் நாசித் துவாரம். இப்படி மிகச்சிறிய விவரங்கள் கூட தெளிவாய்ப் பதிவானதற்குக் காரணம், இந்தப் புகைப்படத்தில் focus சரியாகக் கையாளப்பட்டிருப்பதுதான்.


இந்த மூன்றாவது படம், ஒரு பெண்ணின் பாதங்கள் கடந்து செல்லும் நொடியைப் பதிவு செய்திருக்கிறது. வெகு சாதாரணமான ஒரு நிகழ்வை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்திருக்கிறது இந்தப் புகைப்படம். தங்கக் கொலுசுகளைச் சுமக்கும் இரண்டு பாதங்கள், அந்த தங்கக் கொலுசுகளுக்கு ஏற்றாற் போல் அதே நிறத்தில் சற்று உயர்த்திப் பிடிக்கப்பட்ட பட்டுப்பாவாடை, அவள் நடந்து செல்வதைப் பார்ப்பவர் உணரும் விதத்தில் தூக்கியபடி இருக்கும் ஒரு பாதம். அதிகம் நெருடலில்லாத பின்னணி.
ஒரு தேவதையின் மென்மையைத் தாங்கியபடி சட்டகத்தைக் கடந்து செல்லும் பாதங்கள், அந்தப் பாதங்களின் அழகில் தோற்றுவிட்டேன் நான் என்று சொல்வது போல தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அந்த  சாணத்தின் மீது பூத்திருக்கும் வாடிப்போன அந்தஒற்றை பூசணிப் பூ. சட்டகத்தின் நடுவில் வந்து இந்தப் புகைப்படத்தின் அழகைக் குலைக்காமல் அந்தப் பாதங்கள் சட்டகத்தை விட்டு வெளியேறும் முனையில் இருந்து அந்த அழகை இன்னும் மெருகேற்றுகிறது அந்தப் பூ. 
அந்தப் பூவையின் பாதங்கள் சட்டகத்தைக் கடப்பதும், சட்டகத்தில் அந்த ஒற்றைப்பூ இருக்கும் இடமும் அழகாகக் கையாளப்பட்டுள்ள ஆக்க அமைவிற்கான அடையாளங்கள். இந்தப் படத்திலும் ஒருவேளை focus அந்தப் பாதங்களை விடுத்து அந்தப் பூவிலோ அல்லது பின்னணியிலோ இருந்திருந்தால் அந்த தேவதையின் பாதங்களின் அழகும் கூட தொலைந்து தான் போய் விட்டிருக்கும்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2605

Monday, March 1, 2010

முகங்களற்ற உணர்வுகளின் முகவரிகள்

மனிதனின் உள்ளுணர்வுகளை ஊடுருவிப் படம் பிடிக்க அவசியமில்லாமல் செய்துவிட்ட ஒரு அற்புதம், மனிதனின் முகம். மனதின் எண்ண ஓட்டங்களை வெளி உலகிற்காக சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகள்தான் முகங்கள். இயல்பான முகங்கள் எப்படி மனிதனின் உணர்வுகளை வெளிக்கொணரும் என்பதை நாம் அறிவோம், ஆனால் ஒரு மனிதனின் முகத்தை சட்டகத்துள் கொண்டு வராமல் உணர்வுகளைப் படம் பிடிப்பதும் ஒரு கலைதான்.
நமது திரைப்படங்களில் ஒரு காட்சி உண்டு, ஒரு ஆணும் பெண்ணும் விரும்புவார்கள், ஆண் தன் விருப்பத்தை சொன்னதும், பெண் தன் கால் பெருவிரலால் தரையில் கோலம் போடுவாள், அவளும் அவனை விரும்புகிறாள் என்பதை வெறும் கால் பாதங்களை மட்டுமே வைத்து ஒரு பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் இந்தக் காட்சி.
இது போல பல உணர்வுகளை வெறும் கைகள், கால்கள் என்று ஒரு மனித உடலின் சில பாகங்களை மட்டுமே சட்டகத்திற்குள் கொண்டு வந்து அந்த மனிதனின் உணர்வுகளை அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்க்கு உணர்த்த முடியும். சரியான ஆக்க அமைவு (composition) இது போன்ற புகைப்படங்களுக்கு அவசியம். புகைப்படங்களில் கோடுகளோ அல்லது வளைவுகளோ (lines and curves) இருக்கையில் அவை சட்டகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து துவங்குவது போல் படம் பிடித்தால், அவை பார்வையாளரின் கண்களை அந்தக் கோடு துவங்கும் புள்ளியில் இருந்து புகைப்படத்தினுள் வழி நடத்திச் செல்லும். இதை leading lines என்று அழைப்பார்கள்.


இந்த முதல் படத்தைப் பார்ப்போம், எதையோ எதிர்பார்த்து நீளும் ஒரு கரம், தன்னிடம் ஏதோ இல்லை, உங்களால் இயன்றதைக் கொடுங்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாமல் ஒரு செய்கையின் மூலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது, என் தேவைகள் என்னிடம் இல்லாமல் போனதற்கு என் முதுமை கூட ஒரு காரணமாய் இருக்கலாம் என்பதை உணர்த்துவது போல அந்தக் கரங்களில் தெரியும் சுருக்கங்கள். சற்றே இருள் நிரம்பிய என் உலகிற்குள் நான் ஒளியை யாசிக்கிறேன் என்று கேட்பது போல, சற்று இருண்ட மூலையில் இருந்து துவங்கினாலும் எங்கிருந்தோ வரும் ஒளிக்கீற்றில் நனைந்து கொண்டிருக்கும் அந்த உள்ளங்கை. புகைப்படத்தில் இருக்கும் உணர்வுகளை மேலும் ஆழமாய் வெளிக்கொணரும் பின் தயாரிப்பு.
புகைப்படத்தில் அங்கங்கே சில நெருடல்களும் இருக்கவே செய்கின்றன, ஆனால் அவையும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலை உணர்த்துவதால் அவை கூட ஒரு விதத்தில் இந்தப் புகைப்படத்தில் உள்ள‌உணர்வுகளை ஆழமாய் சித்தரிக்க‌வே உதவுகிறது. இங்கே அந்தக் கை துவங்கும் இடம் சட்டகத்தின் ஒரு மூலையில் உள்ளதால் அங்கிருந்து அந்தக் கோடு நம் கண்களை வழி நடத்தி உள்ளங்கையில் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை நாம் பார்ப்பது இந்தப் புகைப்படத்தின் ஆக்க அமைவு சரியாய் அமைந்ததால்தான்.



 
இரண்டாவது படம் ஒரு மழலையின் தீண்டலை உணர்த்துகிறது, பிஞ்சு விரல்கள் அந்த சிவந்த பாதங்களோடு விளையாடுகையில் அந்த நொடிகளின் மென்மையையும் உன்னதத்தையும் முகமில்லாமல் வெறும் ஒரு கையும் காலும் மட்டுமே சட்டகத்திற்குள் வைத்து உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். இங்கும் ஆக்க அமைவு சரியாக கையாளப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். சட்டகத்தின் முனையில் இருந்து நீளும் அந்தக் கைகள் அத‌ற்கே உரிய மென்மையோடு நம்மை அந்தப் பாதங்களுக்கு வழி நடத்திச் செல்கின்றது, அந்த விரல்களும் பாதங்களும் மோதும் புள்ளியில் நம் கண்கள் ஊன்றிவிடுவதற்கு மற்றொரு காரணம் இந்தப் புகைப்படத்தின் பின்னணி, அதிக நெருடலில்லாமல் இந்தப் படம் சொல்லவிரும்பும் உணர்வை எந்த விதத்திலும் குலைத்துவிடாமல் இருப்பதும் பின்னணியாலும்தான். இவை எல்லாம் சேர்ந்து அமைந்ததால்தான் இந்தப் புகைப்படம் பார்க்கும் நம்மையும் அந்த உணர்வுகளுக்குள் இழுத்துச் செல்கிறது.

மூன்றாவது படமும் கூட வெறும் கைகளை மட்டுமே வைத்து ஒரு உணர்வைக் கதை போல் பேசுகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்க்கையில் சொல்லாமல் விட்டுவிட்ட நன்றிகளைச் சொல்வது போல ஒரு உணர்வைத் தருகிறது இந்தப் படம். சுருக்கம் விழுந்த கைகள், இறுக்கமாய் அல்லாமல் சற்றே வலுவில்லாமல் குவிக்கப்பட்ட கரங்கள், பின்னணியில் இருக்கும் வேறு ஒருவரது கைகள். அதிக நெருடலில்லாத சட்டகம், மிக வலுவாய் அமைந்துவிட்ட பின்னணி இவைதான் இந்தப் படத்தின் பலம்.
புகைப்படத்தின் வலது கீழ் மூலையில் கைகள் துவங்கும் இடத்தில் சற்று உறுத்திக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு பொருள். அது இந்தப் படத்தின் ஆக்க அமைவில் ஒரு குறைதான் என்றாலும், அதை நம் கண்கள் கடந்து கைகளுக்குச் சென்ற உடன் அங்கிருந்து நம் கண்களை வேறு ஏதும் ஈர்ப்பதில்லை. அந்தக் கரங்கள் எந்த உணர்வை வெளிக்காட்ட குவிந்ததோ அதை முகங்களின் உதவியில்லாமல் சற்றும் குறைவில்லாமல் பதிவு செய்துள்ளதே இந்தப் புகைப்படத்தின் பலம்






http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2575