Wednesday, January 11, 2012

விதைகளின் வரலாறு - 2

பொங்கல் தேதி இன்னதென்று தெரியும் வரை இருப்பு கொள்ளாது எங்களுக்கு, கடைசியாய் பஞ்சாங்கம் பார்த்து சரியான தேதியை தாத்தா உறுதிப்படுத்தும் வரை தொடரும் அந்தப் பரபரப்பு. தேதி முடிவானதுமே ஜூட் அண்ணன் அடுத்த வேலையை சத்தமில்லாமல் துவங்கிவிடுவார்.

அடுத்து நடக்கும் எல்லா சின்னச் சின்ன சந்திப்புகளிலும் இது குறித்தே பேச்சாய் இருக்கும். அக்டோபர் மாதம் முன்பதிவுக்கான தேதியென்றாலும் அதற்கு ஓரிரு மாதங்கள் முன்னரே ரயில் நிலையம் சென்று முன்பதிவுக்கான படிவங்களை மொத்தமாய்க் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்வார். மொத்தம் 25 பேர் சென்னையிலிருந்து பயணமாவோம், அத்தனை பேரின் பெயர், வயது என்று எல்லாம் வெவ்வேறு கையெழுத்துகளில், வெவ்வேறு பேனாக்கள் கொண்டு நிரப்பப்பட்டு தயாராயிருக்கும் அக்டோபரை எதிர்பார்த்து.

இந்த 25ல் மொத்தம் 8 குடும்பங்கள் போக சென்னையில் வேலை செய்யும், படிக்கும் என்போன்ற உதிரிகளும் அடக்கம். சென்னையில் இருக்கும் நாங்கள் அனைவரும் தீபாவளிக்கு பத்து (எ) பத்மாவதி சித்தியின் வீட்டில் கூடிவிடுவோம். வெறும் நினைவுகளாலேயும், வெடிச் சிரிப்புகளாலேயும் நிரம்பி இருக்கும் எங்கள் எல்லா தீபாவளியுமே.

பத்து சித்தி ரயில்வே மருத்துவமனையில் மேட்ரனாக இருக்கிறார், அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸில் தான் சித்தியின் வீடு. பழைய ஓட்டு வீடுதானென்றாலும் கொஞ்சம் பெரிய வீடு, சாலைக்கும் வீட்டுக்கும் நடுவே கொஞ்சம் காலியிடம், அதில் அங்கங்கே மரங்களும் செடிகளுமென்று ஆர்ப்பாட்டமின்றி அழகாய் இருக்கும், சாலையின் இருபுறமும் மரங்கள் கிளை பரப்பி நிற்க, வருடம் முழுவதும் பகலில் வெயில் மட்டுமே உலாவிக்கொண்டிருக்கும் சாலையும், வெறும் பறவைகளின் சத்தமும். ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் இலைகளின் இசையுமாய் நிறைந்திருந்த அந்த இடம் அன்றொரு நாள் மட்டும் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்களை வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விடும்.

ஒரு நாற்காலியில் ரெண்டு மூன்று பேர், ஓரமாய்க் கிடக்கும் மரப்பெட்டியின் மேல் கொஞ்சம், உணவருந்தும் மேசைக்கு மேல், உணவருந்தும் மேசைக்குக் கீழ், தரையில் படுத்தபடி, சுவரில் சாய்ந்து நின்றபடி, இண்டு இடுக்கு சந்து பொந்து என்று எல்லோருமே ஒரே அறைக்குள் எங்களை நாங்களே திணித்துக் கொள்வோம். வெயில் தாழத்தாழ அங்கிருந்து மெதுவாய் நகர்ந்து மாலையில் வீட்டுக்கு வெளியே இருக்கும் காலியிடத்தில் கூடிப் பேசியபடியேயிருப்போம்.

இரவு அவரவர் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்ததும் "சரி அப்ப நாங்க போய்ட்டு வாரோம்" என்று சாலையில் நின்றபடியே தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு மேலும் சில மணி நேரங்களுக்கு, "நாள் பூராம் பேசுனது போதாதாக்கும், ரோட்ல வந்து நின்னும்  பேச அப்டி என்னதான் வச்சிருக்கீக‌" என்று ஏதாவது ஒரு சித்தப்பா சொல்ல "விடுங்க அண்ணாச்சி அக்கா தங்கச்சிக எல்லாம் ஒண்ணா சேர்ந்தா அவுகளுக்கு நேரம் போறதே தெரியாது, எவ்வளவு சந்தோசம் பாருங்க அவங்க மொகத்துல" இது திருமலைச்சாமி சித்தப்பா. அப்போதும் அந்த சாலையின் நிசப்தங்களை கிழித்துக் கொண்டிருக்கும் எங்கள் சிரிப்பை இப்போது வேடிக்கை பார்க்க வந்து சேர்ந்திருக்கும் இரவு...

2 comments:

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=MMMX6o8S_vQ

aaradhana said...

super
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw