Thursday, January 12, 2012

விதைகளின் வரலாறு - 3

தீபாவளியன்று விடைபெறுவதற்கு முன்பே ஜூட் அண்ணன் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் அவரவர்க்கான பயணச்சீட்டை கொடுத்து முடித்திருப்பார்.அப்போது மெதுவாய் யாராவது ஆரம்பிப்பார்கள் "ஏய் என்னப்பா ஜூட், எங்களுக்கு மட்டும் சீட் இவ்வளவு தள்ளி போட்ருக்கீங்க, உங்க எல்லாருக்கும் 30 ல வருது எங்களுக்கு மட்டும் 50 கிட்ட போட்ருக்கீங்க", நானும் ஜூட் அண்ணாவும் ஏதோ புரிந்தது போல ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம், அதற்குள் "எங்களுக்கும் தள்ளிதான் இருக்கு போலயே, என்ன வேலை செய்தான் இந்த ரயில்வே டிபார்ட்மெண்ட், எல்லாத்துக்கும் ஒண்ணா போட்டா என்னம்மா?" இது வெள்ளையம்மா சித்தி. "ஒரு லோயர் பெர்த் கூட இல்ல இது பத்தி நாம‌ ரயில்வே மினிஸ்டருக்குக் கண்டிப்பா கம்ப்ளெய்ண்ட் லெட்டர் அனுப்பனும்" இது அனுகுட்டி (எ) அனுராதா அக்கா. "எங்க போட்டா என்ன, எலலாரும் 6 சீட்ல தான் உட்காரப் போறோம், கடைசியா தூங்கும் போது தானா பெர்த்துக்கு போகணும்" என்று ஜூட் அண்ணாவும் நானும் சமாளித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எனக்கும் ஜூட் அண்ணாவுக்கும் மட்டுமே தெரியும் அந்தப் பயணச்சீட்டுகளை வாங்குவதற்கு நாங்கள் பட்ட பாடு எங்கள் புன்னகையின் இழைகளெல்லாம் நிரம்பியிருக்கும் அந்த அனுபங்களால். ஒரு நபருக்கு ஒரு முன்பதிவுப் படிவம்தான், அதில் அதிகபட்சம்  6 பெயர் எழுதலாம். பொதுவாகவே 8 மணிக்குத் துவங்கி அடுத்த 10-20 நொடிகளில் மொத்த ரயிலும் முன்பதிவாகி காத்திருப்போர் பட்டியல் வந்து விடும். இதற்காக காலை 5 மணியிலிருந்தே வரிசை துவங்கி விடும். 8 மணிக்கு முன்பதிவு துவங்குவதற்கு முன் வரிசையில் 100க்கும் அதிகாமானோர் நின்று கொண்டிருப்பார்கள். இத்தனையும் கடந்து அந்த 25 பேருக்கும் முன்பதிவு செய்வதற்கும் ஒரு வழி வைத்திருப்பார் அண்ணன்.

ஜூட் அண்ணனோடு பணி புரியும் லோகு என்பவர் ரயில் நிலையம் அருகிலேயே குடியிருந்தார். அவர் காலை 6 மணிக்கே சென்று வரிசையில் நின்றுகொள்வார், அங்கிருந்து கூட்டம் எப்படியிருக்கிறதென்று தகவல் வந்துகொண்டே இருக்கும். பின்பு நானும் ஜூட் அண்ணாவும் அவரோடு வரிசையில் இணைந்து கொள்வோம். வரிசை மெதுவாய் நகர நகர எங்கள் மூவரின் கண்களும் கவுண்டர் மேல் உள்ள போர்டில் தான் இருக்கும். எங்கள் ரயிலில் யாரவது முன்பதிவு செய்தால் அதற்கான மீதியிருக்கும் பயணச்சீட்டுகளின் விவரம் அதில் பளிச்சிடும்,

நாங்கள் சென்றடையும் வரை ஏதாவது 50-60 ஆவ‌து மிஞ்சிவிட்டால் நல்லதென்று எங்களுக்குள் பேசியபடியே நகர்ந்து கொண்டிருப்போம் .எங்கள் வாய்ப்பு வந்ததும் மூவரும் அடுத்தடுத்த கவுண்டரைப் பிடித்துக் கொள்வோம். முதல் சீட்டை ஜூட் அண்ணன் முன்பதிவு செய்யும் போதே எங்கள் நிலையை விளக்கிவிடுவார். அந்த பயணச்சீட்டின் கோச் எண் தெரிந்ததும் நான் அதே கோச்சில் போடுமாறு வேண்டுகோள் வைப்பேன், அதே போல லோகுவும் அவருடைய கவுண்டரில் சொல்வார். சில சமயம் கவுண்டரில் உள்ளவர்கள் எங்களைப் புரிந்து கொள்வார்கள் பல சமயம் வாக்குவாதம் தான். ஒருவழியாக எல்லாம் முடிந்து லோகு கிளம்பிவிடுவார், நானும் அண்ணனும் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்னால் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்ததும் பயணச்சீட்டுகளை சரிபார்க்கத்துவங்குவோம். "எல்லாம் இப்டி பிச்சிபிச்சி போட்றுக்கானுகளே, இதுக்கு பதில் சொல்லி  முடியாதே" என்பார் அண்ணன், அப்போதிருந்தே தயாராகத் துவங்கிடுவோம் நானும் அண்ணனும் நாங்கள் சந்திக்க‌ வேண்டிய கேள்விகளுக்காக.

ஒவ்வொரு முறையும் பயணச்சீட்டோடு சேர்த்து புன்னகையும் ஏதாவது ஒரு அனுபத்தையும் சுமந்தபடியே வெளியேறுவோம். அப்படி ஒரு மாறுபட்ட அனுபவம் 2010ல் எங்களுக்குக் கிடைத்தது

2010ம் ஆண்டு பொங்கலுக்கு ஊருக்குச் செல்வதற்கு இதேபோல் முன்பதிவை முடித்துவிட்டோம், திரும்பி சென்னை வருவதற்கான முன்பதிவு தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று சர்ச்சுக்குப் போய்விட்டு திரும்புகையில் லதா அக்காவையும், மிஷலையும் அழைத்து வருவதாக சொல்லியிருந்தார் அண்ணன், அதனால் அன்று லோகு வரவில்லை நான் சென்று வரிசையில் காத்துக்கொண்டிருந்தேன். அன்று கூட்டம் வழக்கத்தை விட ஏராளமாய் இருந்தது. சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரோடும் வந்து அண்ணனும் என்னோடு சேர்ந்து கொண்டார்.

"ஏன் டாடி எப்பவுமே இப்படிதான் இருக்குமா?" என்று அக்கா கேட்க, "இல்ல மம்மி இன்னிக்கு தீபாவளி தட்கலும் ஓபன் ஆகுது அதான் இப்டி" என்றார் ஜூட் அண்ணன். கணவன் மனைவியென்றாலும் ஜூட் அண்ணனும், லதா அக்காவும் ஒருவைரையொருவர் டாடி, மம்மியென்றே அழைத்துக்கொள்வார்கள் அவர்களது மகள்தான் மிஷல். 8 மணி ஆனதும் நீண்ட வரிசை மெதுமெதுவாய் சுருங்கத் துவங்கியது. சுமாராய் 8:30 இருக்கும் நாங்கள் கவுண்டரை நெருங்கும் போது.

அண்ணன் மிஷலுக்கும், லதா அக்கவுக்கும் என்ன செய்ய வேண்டுமென்று 100 வது முறையாக விளக்கிகொண்டிருந்தார், லதா அக்காவும் சளைக்காமல் "இந்த கோச்ல போடுங்கனு சொன்னா போதும்ல டாடி" என்று 100வது முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் முறையும் வந்தது, வழக்கம்போல ஜூட் அண்ணன் கோச் எண்ணைக் கேட்டுச் சொன்னதும் நான், லதா அக்கா, மிஷல் மூவரும் அவரவர் கவுண்டரில் அதே கோச்சில் போடும்படி சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு குரல் "மேடம் நீங்க பண்றது ஃபோர்ஜரி" என்று எனக்கு அருகாமையில் கேட்டது. அந்தக் குரலை எதிர்கொண்டபடி கவுண்டருக்கு வெளியே ஆடு திருடி மாட்டிக்கொண்டது போல விழித்துக்கொண்டிருந்தது லதா அக்காவே தான்....

1 comment:

aaradhana said...

super
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw