Tuesday, January 10, 2012

விதைகளின் வரலாறு

ஏதோ தான் மட்டுமே இவ்வுலகை ஆள்வதைப் போல தன் கிளைகளை எல்லா திசைகளிலும் நீட்டி நிமிர்த்திக் கொண்டு ஒரு மௌனியைப் போல நின்று கொண்டிருக்கும் மரத்தைப் பார்க்கையிலெல்லாம் சட்டெனெத் தோன்றும் யார் விதைத்திருப்பார் இந்த மரத்துக்கான விதையையென்று. அப்படி ஒரு விதையைத் தேடி அலையும் சிறு முயற்சி இது

மே மாதம் ஏதோ ஒரு நாள் அன்று அதிகாலையிலேயே அலறியது என் கைப்பேசி. என் ஆழ்ந்த நித்திரையை அன்று கலைத்தது ஜூட் அண்ணன் தான். அது என்னவோ அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் அது எனக்கு உற்சாகத்தைத் தவிர்த்து வேறேதும் கொடுப்பதேயில்லை, ஏன்னா அண்ணன் ஆள் அப்படி. கைப்பேசி காதுக்குச் சென்றதுமே "ஏய் தம்பி ஒண்ணுமில்ல பொங்கல் 14th வருதா இல்ல 15th வருதா அடுத்த வருசம்", "எப்ப வந்தா என்னண்ணா ஒரு வாரம் முழுசா போட்றலாம் லீவு" இது நான். "அதுக்கில்ல தம்பி ஒரு calendar ல 14 ந்னு போட்ருக்கு இன்னொன்னுல 15 ந்னு போட்ருக்கு, நீ ஊர்ல கேட்டு சொல்றியா, அப்பதான் டிக்கெட் என்னிக்கு open ஆகுதுன்னு பாக்க சரியா இருக்கும்"

இப்படித்தான் துவங்கும் எங்கள் பொங்கல் ஒவ்வொரு வருடமும். பொங்கல் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்கள் வருடம் முழுதுமே வரப்போகும் அந்த நாளுக்காகத்தான் ஏங்கிக் கிடப்போம், நானும் ஜூட் அண்ணாவும் மட்டுமல்ல எங்கள் மொத்த குடும்பமுமே அப்படித்தான். எங்க தாத்தாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள், மூன்று ஆண்களும், ஏழு பெண்களும். அவர்களின் பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் என்று நான்காவது தலைமுறையைத் தொட்டாயிற்று, கிட்டத்தட்ட 100 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் குடும்பத்தின் மக்கள்தொகை.

பொங்கல் நடக்கும் அந்த ஒரு வாரமும் எங்கள் குடும்பத்தின் முகவரி ஒன்றே "திறுக்குறுங்குடி". திருநெல்வேலி தாண்டி வள்ளியூருக்கு அருகே எங்களுக்காக எங்கள் தாத்தாவும் ஆச்சியும் உருவாக்கிக் கொடுத்திருக்கும் சொர்க்கம். இதற்கு முன் சொர்க்கத்திற்குப் போய் வந்து பழக்கமில்லைதான் எனக்கு, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த ஒரு வாரம் நாங்கள் வாழும் அந்த நொடிகளுக்காக சொர்க்கம் கூட ஏங்கிப் போகும்.

தேடல் தொடரும்...

1 comment:

aaradhana said...

excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw