நமது திரைப்படங்களில் ஒரு காட்சி உண்டு, ஒரு ஆணும் பெண்ணும் விரும்புவார்கள், ஆண் தன் விருப்பத்தை சொன்னதும், பெண் தன் கால் பெருவிரலால் தரையில் கோலம் போடுவாள், அவளும் அவனை விரும்புகிறாள் என்பதை வெறும் கால் பாதங்களை மட்டுமே வைத்து ஒரு பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் இந்தக் காட்சி.
இது போல பல உணர்வுகளை வெறும் கைகள், கால்கள் என்று ஒரு மனித உடலின் சில பாகங்களை மட்டுமே சட்டகத்திற்குள் கொண்டு வந்து அந்த மனிதனின் உணர்வுகளை அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்க்கு உணர்த்த முடியும். சரியான ஆக்க அமைவு (composition) இது போன்ற புகைப்படங்களுக்கு அவசியம். புகைப்படங்களில் கோடுகளோ அல்லது வளைவுகளோ (lines and curves) இருக்கையில் அவை சட்டகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து துவங்குவது போல் படம் பிடித்தால், அவை பார்வையாளரின் கண்களை அந்தக் கோடு துவங்கும் புள்ளியில் இருந்து புகைப்படத்தினுள் வழி நடத்திச் செல்லும். இதை leading lines என்று அழைப்பார்கள்.
புகைப்படத்தில் அங்கங்கே சில நெருடல்களும் இருக்கவே செய்கின்றன, ஆனால் அவையும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலை உணர்த்துவதால் அவை கூட ஒரு விதத்தில் இந்தப் புகைப்படத்தில் உள்ளஉணர்வுகளை ஆழமாய் சித்தரிக்கவே உதவுகிறது. இங்கே அந்தக் கை துவங்கும் இடம் சட்டகத்தின் ஒரு மூலையில் உள்ளதால் அங்கிருந்து அந்தக் கோடு நம் கண்களை வழி நடத்தி உள்ளங்கையில் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை நாம் பார்ப்பது இந்தப் புகைப்படத்தின் ஆக்க அமைவு சரியாய் அமைந்ததால்தான்.
இரண்டாவது படம் ஒரு மழலையின் தீண்டலை உணர்த்துகிறது, பிஞ்சு விரல்கள் அந்த சிவந்த பாதங்களோடு விளையாடுகையில் அந்த நொடிகளின் மென்மையையும் உன்னதத்தையும் முகமில்லாமல் வெறும் ஒரு கையும் காலும் மட்டுமே சட்டகத்திற்குள் வைத்து உணர்த்துகிறது இந்தப் புகைப்படம். இங்கும் ஆக்க அமைவு சரியாக கையாளப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். சட்டகத்தின் முனையில் இருந்து நீளும் அந்தக் கைகள் அதற்கே உரிய மென்மையோடு நம்மை அந்தப் பாதங்களுக்கு வழி நடத்திச் செல்கின்றது, அந்த விரல்களும் பாதங்களும் மோதும் புள்ளியில் நம் கண்கள் ஊன்றிவிடுவதற்கு மற்றொரு காரணம் இந்தப் புகைப்படத்தின் பின்னணி, அதிக நெருடலில்லாமல் இந்தப் படம் சொல்லவிரும்பும் உணர்வை எந்த விதத்திலும் குலைத்துவிடாமல் இருப்பதும் பின்னணியாலும்தான். இவை எல்லாம் சேர்ந்து அமைந்ததால்தான் இந்தப் புகைப்படம் பார்க்கும் நம்மையும் அந்த உணர்வுகளுக்குள் இழுத்துச் செல்கிறது.
புகைப்படத்தின் வலது கீழ் மூலையில் கைகள் துவங்கும் இடத்தில் சற்று உறுத்திக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு பொருள். அது இந்தப் படத்தின் ஆக்க அமைவில் ஒரு குறைதான் என்றாலும், அதை நம் கண்கள் கடந்து கைகளுக்குச் சென்ற உடன் அங்கிருந்து நம் கண்களை வேறு ஏதும் ஈர்ப்பதில்லை. அந்தக் கரங்கள் எந்த உணர்வை வெளிக்காட்ட குவிந்ததோ அதை முகங்களின் உதவியில்லாமல் சற்றும் குறைவில்லாமல் பதிவு செய்துள்ளதே இந்தப் புகைப்படத்தின் பலம்.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2575
1 comment:
excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw
Post a Comment