Monday, February 22, 2010

சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்

மனித முகங்களை படம் பிடித்தலில் இருக்கும் ஆனந்தமே தனி தான். வீடுகளில் இன்னும் பழைய புகைப்படங்களை மாட்டி வைத்திருப்போம் பலரும். சொல்லிவைத்தாற் போல இந்தப் புகைப்படங்களில் இருக்கும் எல்லா முகங்களுமே நம்மையே வெறித்துப் பார்த்தபடி இருக்கும். வேறு எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் ஒரு இறுக்கமான புன்னகையுடன் நம் வீடுகளை அலங்கரிக்கும் இத்தகைய‌ புகைப்படங்கள் ஏராளம்.
மனித முகங்களைப் படம் பிடிக்கும் பொழுது முடிந்தவரை அவர்கள் இயல்பாய் இருக்கும் நொடியில் படம் பிடித்தால் அந்தப் படத்திற்க்கே ஒரு தனி அழகு வந்துவிடும். இப்படிப் பட்ட படங்களை Candid என்று அழைப்போம். Candid என்றால் கபடமில்லாத அல்லது நேர்மையான ஒரு நொடி என்று சொல்லலாம், அல்லது நாம் நாமாய் இருக்கும் தருணம். நம் வீட்டில் அமர்ந்து உணவருந்தும் போது எதைப் பற்றியும் கவலையின்றி சோற்றை கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அதே ஒரு உயர்தர உணவகத்தில் அமர்ந்திருந்தால் தோசையைக் கூட கரண்டியால் சாப்பிடுவோம். முதல் வகை தான் Candid, எதைப் பற்றியும் கவலையின்றி நாம் நாமாய் இருக்கும் நொடி; இரண்டாவது வகை Posing . அதாவது பாவனை. நாம் ஒன்றும் குறைந்தவரில்லை என்று காட்டுவதற்காக நம் இயல்பை மீறி நாம் செய்யும் ஒரு செயல்.
ஒருவர் இயல்பாய் இருக்கையில் படம் பிடித்து அதை அவர்களிடம் காட்டும் பொழுது அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி "பாக்கும் போது எடுத்திருக்கலாம்ல" என்பதுதான். அப்படி எடுப்பதில் இருக்கும் ஒரே பின்னடைவு நம்மில் பலருக்கும் புகைப்படக் கருவியைப் பார்த்தபடியே இயல்பாய் இருப்பது முடியாது என்பது. நேருக்கு நேராய் அதைப் பார்த்தப்படியே மிகவும் செயற்கையான ஒரு புன்னகையையும் போர்த்திக் கொண்டு நின்று விடுவோம் தோசையைக் கரண்டியால் சாப்பிடுவது போல, சுருக்கமாய் சொன்னால், pose கொடுப்போம். வெகு சிலரால் மட்டுமே புகைப்படக்கருவியை பார்த்தபடியே இயல்பாய் இருக்க முடியும் அது ஒரு தனி கலை.

இப்படிப்பட்ட நேருக்கு நேராய் எடுக்கப்படும் புகைப்படங்கள் எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும் உயிரற்று இருப்பது போல இருக்கும். இந்த முதல் படத்தில் உள்ளவர் வலிகளின் சுமையை தன் தோலின் சுருக்கங்களில் அடக்கிக் கொண்டு தெருக்களின் அரவணைப்பில் வாழ்க்கையைத் தேடுபவர். காயம் சுமந்த நெற்றி, மனதின் காயங்களை ஆற்றமுடியாமல் தவிக்கும் தவிப்பை தலைமுடிக்கும் தாடிக்கும் இடையே ஒளிந்து கொள்ள‌விடாமல் போட்டு உடைக்கும் அந்த முகம், ஏக்கம் சுமந்த அந்தப் பார்வை -- இப்படி தொலைந்து போன ஒரு வாழ்வின் அடையாளமாய் ஒரு உருவம். பின் தயாரிப்பின் மூலம் இன்னும் ஆழமாய் வெளிக்கொணரப்பட்டுள்ளன இந்த உணர்வுகள்.
இந்தப் புகைப்படத்தில் பிண்ணனியும் ஒரு குறை தான்; ஆனால் இந்தப் படத்தின் வீரியத்தை வெகுவாகக் குறைத்து விடுவது நேருக்கும் நேராய் அவர் புகைப்படக் கருவியைப் பார்த்தபடி இருப்பதுதான். மனித முகத்தைப் படம் பிடிப்பதன் நோக்கமே நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கும் மனித இயல்புகளை பதிவு செய்வதுதான். ஒருவேளை இந்த மனிதர் இயல்பாய் இருக்கையில் இவரைப் பதிவு செய்திருந்தால் இவர் சுமந்து கொண்டிருக்கும் வலிகளை இன்னும் ஆழமாக உணர்த்தி இருக்கக் கூடும்.
இந்த இரண்டாவது படத்தைப் பார்த்தால் இயல்பாய் ஒரு நொடியைப் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பது நமக்கே தெரிந்துவிடும்.

தெருவோரம் பூக்களை விற்கும் ஒரு பெண்; பெரும்பாலும் வியாபாரத்திலேயே கவனமாய் இருக்க வேண்டிய கட்டாயம், வெயிலோ மழையோ அன்றைய பூக்களை அன்றே விற்றாக வேண்டும். அன்று மிஞ்சிப் போவதெல்லாமே குப்பைக்குத்தான். இந்த சிந்தனைகளூடே நகர்ந்து கொண்டிருக்கும் நொடிகளில், அவளைக் கடந்து செல்லும் அந்தக் கால்களுக்குச் சொந்தமான மனிதரின் ஏதோ ஒரு செய்கையால் ஏதோ ஒரு நொடியில் தெறித்து விழுந்தது தான் இந்தப் புன்னகை; அடுத்த நொடியில் மறைந்து போகக் கூடிய‌ ஒரு அற்புதமான தருணம் அவர் இயல்பாய் இருக்கையில் வெகு இயல்பாய் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் பலம். எப்பொழுது இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் பார்ப்பவர் உதடுகளிலும் ஒரு இயல்பான புன்னகை தோன்றும். இதுபோல ஒரு உணர்வை வெகு எளிதாய் நமக்குள் ஏற்படுத்தும் திறன் தான் ஒரு புகைப்படத்தின் உயிர்.

இந்தப் படமும் அப்படித்தான்: நாம் அடிக்கடி விவாதிக்கும் பள்ளிக் குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை. நாம் எவ்வளவு தான் வார்த்தைகளில் வடித்தாலும் அவர்கள் அந்தப் புத்தகப்பையை எவ்வளவு சிரமத்துடன் சுமக்கிறார்கள் என்பதை விளக்குவது கடினம். இந்தப் புகைப்படத்தில் அத்தகைய ஒரு நொடி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்திலும் பிண்ணனி ஒரு குறைதான். பின்னால் தெரியும் நிறங்கள் நம் கண்களை அந்த சிறுவனிடம் ஊன்றவிடாமல் செய்கிறது; ஆனாலும் இது போல ஒரு முற்றிலும் இயல்பான நொடியைப் பதிவு செய்கையில் நம் கவனம் முழுவதும் அந்த ஒரு நொடிக்காகவே காத்திருக்கும். அது நடந்தேறுகையில் பதிவு செய்யப்பட்டால் அந்தப் புகைப்படத்தின் அழகு அதிலிருக்கும் குறைகளையும் தாண்டி அதைத் தூக்கி நிறுத்தும். ஆம் அவ்வளவு வலிமையானவை மனித இயல்புகள்.
பொதுவாகவே நாம் யாரை புகைப்படம் எடுக்கிறோமோ அவர் மிகவும் இயல்பாய் இருக்கும் ஒரு நொடியை பதிவு செய்தால் அதன் அழகே தனிதான். அப்படிப்பட்ட புகைப்படங்களை பின்னாளில் புரட்டிப் பாருங்கள்: எட்டிப் பார்க்கும் ஒரு துளி கண்ணீரோ அல்லது உதடுகளில் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்ளும் புன்னகையோ இலவசம்.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2549

1 comment:

aaradhana said...

excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw