Monday, March 8, 2010

தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்

ஒரு புகைப்படத்தில் நம் கண்கள் முதலில் தேடிப் பிடிக்கும் எல்லாமே தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கும் பகுதிகள்தான். தெளிவற்று சற்று மங்கலாய் இருக்கும் பகுதிகளை ஒதுக்கிவிடவே துடிக்கும் நமது கண்கள், அதுதானே இயல்பு. இப்படித் தெளிவாய் இருப்பவைதான் புகைப்படக்கருவி செய்த பகுதிகள். அது தவிர்த்து சட்டகத்தில் மழுங்கிப் போய் இருக்கும் மற்றவற்றை out of focus என்று அழைப்பார்கள்.
, out of focus நம் கண்கள் எதைப் பார்த்தாலும் அது நமக்குத் தெளிவாய்த் தெரியும். நாம் உற்று நோக்கும் அந்தப் பொருள் தவிர, மற்றவை சற்று மங்கலாகவே இருக்கும். அது போல ஒரு புகைப்படத்திலும் அதை உருவாக்குபவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத் தெளிவாய்ப் படம் பிடித்திருப்பார், நம் கவனம் வேறு எங்கும் சிதறிவிடா வண்ணம் ஆக்க அமைவோடு அது அமைந்துவிட்டால் அது பார்வையாளரை எளிதில் சென்றடைந்துவிடும்.
பொதுவாகவே புகைப்படக் கருவிகளில் இரண்டு விதமான focus வசதிகள் உண்டு. ஒன்று, auto focus. இது அப்போது இருக்கும் ஒளி அமைப்பைப் பயன்படுத்தி புகைப்படக் கருவியே எதைக் கூர்மையாய்க் காட்ட வேண்டும் என்று தேர்வு செய்து விடும், மற்றொன்று, manual focus. நாமே நமக்கு எது தேவையோ அதைக் கூர்மையாய்க் காட்டும்படி புகைப்படக் கருவியைத் திருத்தி அமைத்துக் கொள்வது.


Focus என்பது ஒரு புகைப்படத்தில் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று முதல் படத்தின் மூலம் உணரலாம். எத்தனையோ கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம். வேறொரு நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நம் நாட்டுப் பெண்ணொருத்தி பூச்சூட்டுகிறாள், வந்தாரை வரவேற்கும் தமழனின் மரபைப் பளிச்சென்று படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புகைப்படம். பூக்களுக்குப் பழகாத அந்தப் பெண்ணின் கூந்தலில் கவனமாய்ப் பூச்சூட்டி விடும் அந்த தமிழ்ப் பெண்ணின் நேர்த்தி, தெருவோரமாய்த்தான் நடக்கிறது என்று நமக்குணர்த்தும் பின்னணி, அந்த வெளிநாட்டுப் பெண்ணின் புன்னகையில் தெறிக்கும் நாம் மெதுவாய்த் தொலைத்துக் கொண்டிருக்கும் - நம் பண்பாட்டின் சுவடுகள். நம் கண்களை அதிகம் உறுத்தாத நிறங்கள் என்று எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் இந்தக் கதைகளைச் சொல்லும் அந்த இரண்டு பெண்களுமே தெளிவற்று இருப்பது இந்தப் புகைப்படத்தின் அழகை வெகுவாய்க் குறைத்து விடுகிறது.
அந்தப் பெண்கள் தெளிவில்லாமல் மழுங்கலாய்த் தெரிய, பின்னணியில் உள்ள வாசல், கதவு இவை எல்லாம் மிகவும் தெளிவாய் இருக்கிறது. அதனால் நம் கண்கள் அந்தப் பெண்களின் இயல்புகளில் ஊன்றாமல் அவர்களுக்குப் பின்னால் தெளிவாய் இருக்கும் மற்ற தேவையற்ற பொருட்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஒரு மிகச்சிறந்த நொடியைப் பதிவு செய்த இந்தப் புகைப்படம் அதை சற்று தெளிவாய்ச் செய்யாததால் அந்த நொடியின் உன்னதமே குறைந்துவிடுகிறது.

இரண்டாவது படம் சரியாகக் கையாளப்பட்டால் focus எப்படி ஒரு படத்தை மெருகேற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு பச்சோந்தியின் படம். இந்தப் புகைப்படத்தில் பச்சோந்தி மட்டும் பளிச்சென்று நம் கண்களில் ஒட்டிக்கொள்கிறது, சரியாக focus செய்யப்பட்டதால் மிகத் தெளிவாய்ப் பதிவுசெய்யப்பட்டுள்ளது அந்தப் பச்சோந்தியின் உடல். 
எந்த இடையூறுமில்லாத பின்னணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். மிகச் சீரான வெளிச்சம் பரவியுள்ள சட்டகம், மேலும் பச்சோந்தி சட்டகத்தின் நடுவில் அல்லாமல் சற்று ஓரமாக வைத்துக் கையாளப்பட்டிருக்கும் ஆக்க அமைவு. இவை எல்லாவற்றையும் விட இதைப் படம் பிடித்தவர், நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்துப் படம்பிடித்த பச்சோந்தியின் உடல் பாகங்கள் எல்லாம் தெள்ளத்தெளிவாய்த் தெரிவதுதான் இந்தப் படத்தை முழுமை அடைய வைக்கிறது. அந்த உடலில் பரவிக்கிடக்கும் பச்சை நிறம், அதன் தோலில் நிறைந்திருக்கும் தொடுபரப்பு (Texture), அதே பச்சை நிறத்தில் தனித்து நிற்கும் அதன் கண், ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான அதன் வாயின் உட்புறம், இவை அனைத்திற்கும் மேலாக அதே இளஞ்சிவப்பு நிறத்தில் அதன் பச்சை நிற உடலில் இருந்து வேறுபட்டுத் தெரியும் அதன் நாசித் துவாரம். இப்படி மிகச்சிறிய விவரங்கள் கூட தெளிவாய்ப் பதிவானதற்குக் காரணம், இந்தப் புகைப்படத்தில் focus சரியாகக் கையாளப்பட்டிருப்பதுதான்.


இந்த மூன்றாவது படம், ஒரு பெண்ணின் பாதங்கள் கடந்து செல்லும் நொடியைப் பதிவு செய்திருக்கிறது. வெகு சாதாரணமான ஒரு நிகழ்வை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்திருக்கிறது இந்தப் புகைப்படம். தங்கக் கொலுசுகளைச் சுமக்கும் இரண்டு பாதங்கள், அந்த தங்கக் கொலுசுகளுக்கு ஏற்றாற் போல் அதே நிறத்தில் சற்று உயர்த்திப் பிடிக்கப்பட்ட பட்டுப்பாவாடை, அவள் நடந்து செல்வதைப் பார்ப்பவர் உணரும் விதத்தில் தூக்கியபடி இருக்கும் ஒரு பாதம். அதிகம் நெருடலில்லாத பின்னணி.
ஒரு தேவதையின் மென்மையைத் தாங்கியபடி சட்டகத்தைக் கடந்து செல்லும் பாதங்கள், அந்தப் பாதங்களின் அழகில் தோற்றுவிட்டேன் நான் என்று சொல்வது போல தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள அந்த  சாணத்தின் மீது பூத்திருக்கும் வாடிப்போன அந்தஒற்றை பூசணிப் பூ. சட்டகத்தின் நடுவில் வந்து இந்தப் புகைப்படத்தின் அழகைக் குலைக்காமல் அந்தப் பாதங்கள் சட்டகத்தை விட்டு வெளியேறும் முனையில் இருந்து அந்த அழகை இன்னும் மெருகேற்றுகிறது அந்தப் பூ. 
அந்தப் பூவையின் பாதங்கள் சட்டகத்தைக் கடப்பதும், சட்டகத்தில் அந்த ஒற்றைப்பூ இருக்கும் இடமும் அழகாகக் கையாளப்பட்டுள்ள ஆக்க அமைவிற்கான அடையாளங்கள். இந்தப் படத்திலும் ஒருவேளை focus அந்தப் பாதங்களை விடுத்து அந்தப் பூவிலோ அல்லது பின்னணியிலோ இருந்திருந்தால் அந்த தேவதையின் பாதங்களின் அழகும் கூட தொலைந்து தான் போய் விட்டிருக்கும்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2605

2 comments:

aaradhana said...

super post
https://www.youtube.com/edit?o=U&video_id=s9Ly6QqBSiQ

aaradhana said...

excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw