ஒரு பெண் இங்கே எப்படிப் பார்க்கப்படுகிறாள்? இதிலென்ன கேள்வி பெண்ணாகவே பார்க்கப்படுகிறாள் அதுதானே அவளின் அடையாளம், இதுவே பதிலாக வரும். ஆனால் அவளை அடையாளப் படுத்துகிறோம் என்ற பெயரில் அவளின் சுயசிந்தனை அழிக்கப்படுவதே அங்கேதான்.
அவள் பெண் என்ற பெயரில் அடிமைப்படு்த்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறாளே ஒழிய எங்குமே ஒரு சகமனுஷியாக அவள் அங்கீகரிக்கப்படுவதே இல்லை. ஏன் அவளே கூட அதை உணர்வதில்லை. இங்கே பெண்ணுக்கான வரையறைகள் என்று பாடப்படுவது எல்லாமே தப்புத்தாளங்களாகவே உள்ளன. அதையே சங்கீதம் என்று நம்பி அவளும் தலையாட்டி ரசிக்கிறாள்.
எந்தப் பூவுமே பறிக்கப்படுவதற்காக பூப்பதில்லை, ஆனால் பறித்துவிட்டோம் என்பதற்காக சொல்லப்படும் காரணங்களே அவை பிறந்ததின் காரணமாக சொல்லப்படுவது போல், அவளுக்குக் காயங்களை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டு அதற்கு அவள் பெண்ணாகப் பிறந்ததையே காரணமாக்கி, அவளுக்கு அவளையே சிறையாக்கிவிட்டது வேறெதும் அன்றி தலைமுறைகள் தாண்டி இன்று வேரூன்றியே விட்ட அந்த தப்புத்தாளங்கள் தான், அதற்கு சுருதி சேர்த்து இன்னும் கச்சேரி நடத்திக்கொண்டிருப்பது யாரென்பது ஊரரிந்த ரகசியம்.
இங்கே பெண் பிறந்ததும், அவளுக்கான வாழ்க்கை அவளைத் தவிர அனைவராலும் நிச்சயக்கப்பட்டு விடுகிறது. அவள் வாழும் முறை அனைத்தும் நாளை அவளுக்கு வரப்போகும் கணவன் என்ற தொலைதூரப் புள்ளியின் மனதைக் கோணாமல் பார்த்துக் கொள்ளும் கோணல் கோடுகளாகவே அமைகிறது.
அவள் மனம்விட்டு சிரித்தால் கூட அந்த புன்னகை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை தண்டிக்கப்படும் பொழுதும் பொத்துக் கொண்டு வெளியே வரக் காத்திருக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு 'ஏன்?' என்று அவள் கண்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, அது கேட்காமல் இங்கே பல செவிகள் தான் இன்னும் செவிடாகவே உள்ளன.
பூக்கள் இன்னும் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகளை பறிக்காமல் ரசித்துதான் பார்க்கலாமே? ரசித்து விட்டு வாருங்கள் மேலும் பேசுவோம்...
3 comments:
M running out out of words ....very intense ..and luckily i could sense how intense it is ... Kudos .... to u :-)
Thanks mama
Great work. Expecting more from u, mamu.
Post a Comment